Home » அரசியல், சமூகம், சிறப்பு

தமிழ்த் தேசியம்: உடைக்கப்பட வேண்டியதும் உருவாக்கப்பட வேண்டியதும்

23 August 2010 பார்வையிட்டுள்ளோர் எண்ணிக்கை: 773 No Comment

உடைக்கப்பட வேண்டிய பிற்போக்குத் தமிழ்த் தேசியம்

  • நிலவுடைமை வழிவந்த மேட்டுக்குடி ஆதிக்கக் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு அனைத்துத் தளங்களிலும் மிக இறுக்கமான பிற்போக்குத் தனங்களைக் கொண்டிருப்பது.
  • வெற்று இன, மொழிப் பெருமை பேசிப் பழைமைவாதத்தினுள் உழன்று உழைக்கும் தமிழ் மக்களை இன மொழி உணர்வு மாயைக்குள் அமிழ்த்தி வருவது.
  • வர்க்க அடிப்படையிலான உழைப்புச் சுரண்டலை நடைமுறையாகக் கொண்டு உழைக்கும் தமிழ் மக்களைப் பன்முக வழிகளில் சுரண்டுவதைப் பாதுகாத்து வருவது.

  • தொழிலாளர்கள் விவசாயிகள், மீனவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பெண்கள் என்போரின் அடிப்படை உரிமைகளையும் நியாயமான கோரிக்கைகளையும் என்றுமே தமிழ்த் தேசியம் தனது நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்ளாமல், அவற்றை இன, மொழி, மத, பண்பாட்டு உணர்ச்சிமயத் திரைகளால் மறைத்து திசை திருப்பி நிற்பது.
  • அரசியல் தளத்தில் சொத்து சுகம் கொண்ட உயர் சாதி, உயர் வர்க்க மேட்டுக்குடி ஆண்ட பரம்பரைச் சிந்தனைகளையும் நடைமுறைகளையும் கொண்டிருப்பது.
  • பிராமணியக் கருத்தியல் வகுத்தளித்த சாதியப் படிநிலை அமைப்பைப் பேணிப் பாதுகாத்து உயர்குடி வேளாள ஆதிக்கமாக முன்னெடுத்து தாழ்த்தப்பட்ட மக்களைப் புறந்தள்ளி வந்திருப்பது.
  • சைவ, கிறிஸ்தவ மதங்களது பிற்போக்குத்தனங்களின் மறைவில் ஆதிக்க அரசியலை முன்னெடுத்துச் சொத்து சுகங்களைப் பாதுகாத்து வருவது.
  • பழைமைவாதப் பண்பாட்டின் தொடர்ச்சியை மரபு, வழமை, சடங்கு, சம்பிரதாயங்கள் மூலமும் அறிவியலுக்கு முரணான கருத்தியல்கள் மூலமும் மூடத்தனங்களாகப் பேணி வருவது.
  • தமது அரசியல் இருப்பிற்கும் நீடிப்பிற்குமாக, இன-மத-மொழி-பிரதேசத் துவேஷங்களை உசுப்பி இனவாதத்தில் காலூன்றி நிற்பது.
  • சிங்கள, முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை இழிவாகவும் இரண்டாம் தரமாகவும் நோக்கச் செய்வதுடன் அவர்களுடனான தமிழ் மக்களின் ஐக்கியத்தை தடுத்துக் கொள்வதில் என்றும் கவனமாக இருந்து வருவது.
  • அதே வேளை, சிங்கள மேட்டுக்குடி உயர் வர்க்க சக்திகளோடு வர்க்க, சாதிய உறவு நிலையில் ஐக்கியம் பூண்டிருப்பது.
  • மதம், பண்பாடு, மரபு, சீதனம் என்பனவற்றின் பெயரால் பெண்களை அடிமைத் தனமாகவும் இரண்டாந் தரமாகவும் நடாத்தும் கருத்தியலைத் ஏற்றுக் கொண்டிருப்பது
  • நச்சுத்தனமான அந்நியக் கலை இலக்கியங்களுடனும் சீர்குலைவுப் பண்பாட்டுக் கோலங்களுடனும் எவ்வித முரண்பாடோ எதிர்பார்ப்போ இன்றி இணங்கிப் போவது.
  • வரலாற்றுத் தொடர்பு, தொப்புள் கொடி உறவு என்ற பெயர்களில் இந்திய ஆளும் வர்க்கத்திடம் எப்பொழுதும் அடிமைத்தனமாக இருந்து வருவது.
  • கொலனிய எசமானர்களுடனும் பின்பு ஏகாதிபத்திய வாதிகளுடனும் நம்பிக்கைக்குரிய அடிமை விசுவாசத்துடன் நடந்து கொள்வதுடன் அவர்களது நவகொலனிய பொருளாதார அரசியல் நலன்களுக்குப் பக்கத் துணையாக இருந்து வருவது.

மேற்கூறிய அனைத்தும், புனிதமானவையாகவும் உயர்வானவை யாகவும் சித்திரிக்கப்பட்டு என்றென்றும் கட்டிக்காக்க வேண்டினவாகக் கூறப்பட்டு தமிழ்த் தேசியத்தினுள் படிந்திருக்கும் பிற்போக்குக் கூறுகளாகும். இவை உடைக்கப்படா விடின் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனம் உண்மையான விடுதலைப் பாதையில் பயணிப்பது இயலாததாகும்.

உருவாக்கப்பட வேண்டிய முற்போக்குத் தமிழ்த் தேசியம்

  • தமிழ்த் தேசியம் கொண்டிருக்கும் பழைமைவாத ஆதிக்கக் கருத்தியல் மீது கேள்விகளை எழுப்பிச் சமூக வளர்ச்சிக்குத் தடையாக இருப்பனவற்றை நிராகரிப்பது.
  • காலத்திற்கொவ்வாத இன, மொழிப் பெருமை பேசி வீணே காலத்தைக் கழிப்பதையும் வெறும் இன உணர்வு மாயையின்றும் விலகி யதார்த்தத்தை அறிவியல் பூர்வமாக அணுகி நிற்பது.
  • உடலுழைப்பில் ஈடுபடும் ஏகப் பெரும்பான்மையான தமிழ் மக்களை அரவணைத்து உழைப்பிற்கும் தொழிலுக்கும் உரிய சமூகத் தகைமையை வழங்குவது.
  • தமிழ் மக்கள் மத்தியில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களினதும் உரிமைகளையும் கோரிக்கைகளையும் தன் சகல நிகழ்ச்சி நிரல்களிலும் உள்ளடக்கிக் கொள்வது.
  • அரசியலில் தொடர்ச்சியாக தமிழ்த் தேசியத்தின் பெயரில் ஆதிக்கம் செலுத்தி வரும் சொத்து சுகம் பெற்றவர்களின் மேட்டுக்குடிக் கபடத்தனங்களை அம்பலமாக்கி நிராகரிப்பது.
  • சமூகப் படிநிலை அமைப்பாக நீடித்துவரும் சாதியத்தை மறுத்து சமூக நீதியையும் தமிழ் மக்கள் மத்தியிலான சமத்துவத்தையும் ஐக்கியத்தையும் வலுப்படுத்த முன் நிற்பது.
  • மத நம்பிக்கை என்பதைத் தனிமனித விருப்பு வெறுப்புச் சார்;ந்த ஒன்று என்பதற்கு அப்பால், நிர்ப்பந்தங்கள் மூலமும் மூடநம்பிக்கைகள் ஊடாகவும் பிற்போக்குச் சிந்தனைகளாகப் பரப்புவதை நிராகரிப்பது.
  • இனவாதத்தையும் இனத் துவேஷத்தையும் கிளறி அரசியல் லாபமும் பொருளாதார நன்மைகளும் பெறுவதை நிராகரித்து நிற்பது.
  • சிங்கள, முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை அந்நியர்களாகக் கொள்ளும் பிற்போக்குத்தனங்களை மறுத்துச் சக மனிதர்களாகவும் சகோதரர்களாகவும் கொள்ளும் மனிதநேய ஐக்கியப் போக்கை வளர்த்துக் கொள்வது.
  • சிங்கள பௌத்த பேரினவாத ஆளும் வர்க்க சக்திகளுக்கும் உழைக்கும் சாதாரண சிங்கள மக்களுக்கும் இடையிலான வேறுபாட்டை விளங்கி, உழைக்கும் சிங்கள மக்களுடனான தமிழ் மக்களின் ஐக்கியத்தை வலுப்படுத்துவது.
  • பெண்கள் மீதான சகல வகைப் பழமைவாதப் பண்பாட்டு அடிமைத்தனங்களை அடையாளங்கண்டு அவற்றை நிராகரித்து ஆண்-பெண் சமத்துவத்தை ஏற்படுத்த முன்னிற்பது.
  • நச்சுத்தனமான அந்நியக் கலை இலக்கியங்களையும் சீரழிந்த பண்பாட்டுக் கோலங்களையும் துணிவுடன் மறுத்து நிற்பது.
  • இந்திய ஆளும் வர்க்கத்தின் பிராந்திய மேலாதிக்க நலன்களை விளங்கிக் கொண்டு தமிழ் மக்கள் அதற்குக் கருவியாக்கப் படுவதை மறுத்து நிற்பது.
  • அவ்வாறே, மேற்குலக ஏகாதிபத்திய சக்திகள் மீதான குருட்டு நம்பிக்கை கொள்ளாதிருப்பதுடன், அந்நிய விசுவாசத்தை நிராகரிப்பது.
  • நவகொலனிய உலகமயமாதலை எதிர்த்து நிற்பது

மேற்கூறிய அடிப்டையில் முற்போக்கான தமிழ்த் தேசியம் உருவாக்கப் படுவதை மாக்சிச லெனினிசவாதிகள் வரவேற்கிறார்கள். அவ்வாறு உருவாகும் முற்போக்கான தமிழ்த் தேசியத்துடன் நட்புறவுடன் இணைந்து பயணிப்பதில் மாக்சிச லெனினிசவாதிகளுக்கு எவ்வித சிரமமோ தடைகளோ இருக்க மாட்டாது. இது காலத்தின் தேவையாக இருப்பதை உணர்ந்து தமிழ்த் தேசியத்தின் பிற்போக்குத்தனங்களால் ஏமாற்றப் படுவதைத் தடுக்க இளந் தலைமுறையினருக்கு உள்ள ஒரு வழியாக இம் முற்போக்குத் தமிழ் தேசியம் உருவாக்கப் படுவது தேவையாயும் பயனுடையதாயும் இருக்கும்.

[புதிய பூமி June-July 2010]

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (1 votes, average: 1.00 out of 5)
Loading ... Loading ...

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.